Tuesday, April 7, 2026

உவைஸ் முஹம்மட்

 உவைஸ் முஹம்மட்டின், தலைப்பில்லாக் கவிதைகள் நூலுக்கு எழுதிய முன்னுரை..(2 0 )

உவைஸ் முஹம்மட்டின் உயிர்-மெய் எழுத்துக்கள்...


குறுமுனியாக இருந்து இன்று வாமன அவதாரம் எடுத்துள்ள முகநூல் வாயிலாகத்தான் நண்பர் உவைஸின் சில கவிதைகளை பார்க்க நேர்ந்தது... மானுட உணர்ச்சித் தூண்டலை உண்டாக்கும் பல செறிவான வரிகளை உவைஸின் பதிவுகளில் கண்ணுற்ற போது இவர் நம் மண்ணின் இன்னொரு பிரவாகமாக ஊற்றெடுத்துப் பாய்வார் எனக் கணித்திருந்தேன்.. நம் கணிப்பு பொய்யாகவில்லை...

அவரது ஒட்டு மொத்த எழுத்துக் குவியலுக்குள் மூன்று நாட்களாக புதைந்து கிடந்தேன்.. உயிரையும் மெய்யையும் ஒரு உணர்ச்சி மையத்தில் பிணைக்க அவர் எடுத்திருக்கும் அபாரமான முயற்சி வரவேற்கத்தக்கது.. சூரியனையும் நிழலையும் நதியையையும் அதன் ஈரலிப்பையும் தன் விரல்களுக்குள் சேமித்து வைத்துக்கொண்டு நம்மை நோக்கித்  தொட்டுத் தெளிக்கிறார்.. அந்த விசிறலில். தீச்சுடர்களும் ஈரச் சிலிர்ப்புகளும் சிதறியடிக்கின்றன ..
.
இதனூடே ஒரு சமூகப் பிரக்ஞையை இவரால் நிறுவ முடியுமா என்றால் தலைப்பில்லா கவிதைகள் ஊடே தரவுகளை தருவது மட்டுமே என் வேலை என்கிறார்... உள்மன வெளியில் உல்லாசமாக உலவித்திரியும் சொற் சிதறல்களை ஒரு கட்டிறுக்கமான சட்டகத்துள் பிணைக்கின்ற அசகாய சாதுரியம் இவருக்கு கைவந்துள்ளது என்பேன்...

வெற்றுக் கற்பனாவாதங்களை விட்டும் அப்பாற்பட்டு வாழ்வியலை ஒரு வித்தியாசமான கண்ணாடியூடே பார்க்கின்ற எத்தனத்தில் நம்மையும் அழைத்துச் செல்கிறார்... வெறிகொண்ட வார்த்தைகள் இவரைக் கைது செய்ய அலைகின்ற போது அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் பூசிக்கொள்ளும் அரிதாரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றது...

இரவை ஒரு குவளையில் ஊற்றி  ஒற்றை மிடறில் குடித்து விட எத்தனிக்கின்ற உவைஸ் முஹம்மட்டின் சாதுரியம் அவரது வரிகளில் பளிச்சிடுகிறது...


தன்  கனவைச் சுருட்டி யன்னலால் எறிந்த போதும்,உயிர் திரண்டு வந்து தொண்டைக்குழியில் சுரந்து நிற்கும் போதும் கடலைப் பிழிந்து நீலத்தை தனியாகப் பிரிக்கும் போதும் தன்னை தற்காலக் கவிஞர்களிலிருந்து பெருமட்டுக்கு வித்தியாசப்படுத்தி காட்சிப் படுத்தியிருக்கும்  நண்பர் உவைஸின் வரிகளில் காட்சிகளின் சிறைப்பிடிப்பு அபாரமாகப் பொருந்தி வருகிறது...


கவிதைப் பெருவெளியில் இனி உவைஸ் முகம்மத் இன்னொரு ஆச்சரியப் புது வெள்ளமாகப் பாய்வார் என்ற நம்பிக்கை  வருகிறது ...தலைப்பில்லா கவிதைகள் தந்திருக்கும் கவிஞருக்கு நமது வாழ்த்துக்கள்...

    தலைப்பில்லா கவிதைகள் --..- உவைஸ் முஹம்மட்- வெளியீடு   மருதம் கலைக்கூடல் மன்றம் 

 

அபாயா என் கறுப்பு வாநம்- மின்னூலுக்கான முன்னுரை --அக்கரை மாணிக்கம்

 

அபாயா என் கறுப்பு வாநம்- மின்னூலுக்கான முன்னுரை --அக்கரை மாணிக்கம் 

முன்னுரை.

இவை  இடது கை இறைவனின் படைப்புகள் 

 

 அக்கரைமாணிக்கம்.



நவீன தமிழ்க் கவிதை உலகில்  பழைய மரபுசார் எழுத்துக்கள் கட்டுடைக்கப்பட்டு வருகின்றன.. இதன் உச்சக்கட்டமாக எவரும் எவ்வேளையும் மிக இலகுவாக கவிதை (?) எழுதி விடுகிறார்கள்.. புதியவர்களின் வருகை கவிதைத்துறைக்கு வரவேற்புக்குரியதாக இருந்தாலும் சிலரது எழுத்துக்கள் வாசிக்கக் கூடியவாறு இல்லை என்பது உண்மை. காதலும் பாலியலும் தமிழச் சினிமாக்களில் மலிந்து கிடப்பது போலவே ஈழத்துக் கவிதையுலகிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

ஈழத்துக் கவிதையுலகு தரமும் காத்திரமுமிக்க பங்களிப்பை உடையது. தமிழிலக்கியத்திற்கு  போர்க்கால இலக்கியம் புலம் பெயர் இலக்கியம் என இரு பெரிய புதுப்பாதைகளை அமைத்துக் கொடுத்தது. அப்பாதைகளில் சென்று அதிநவீன கவிதைகள் படைத்துச் சிறப்புற்றோர் பலர்.  அதை விடுத்து மலினச் சரக்குளைக் கையாண்டு கவிதை என்ற பேரால் சண்டித்தனம் செய்வோர் சிலருண்டு.
     
மரபைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அது பற்றிய சொற்ப அறிவு கூட இல்லாமல் நவீன கவிதை படைக்க முடியமென நினைப்பது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல.. பரந்துபட்ட வாசிப்புத்தான் பண்பட்ட படைப்புகளை உருவாக்க முடியும்.

அபாயா என் கறுப்பு வானம் என்ற இக்கவிதைத் தொகுதியை தந்திருக்கும் தீரன். ஆர். எம். நௌஸாத் 1983களில்  தூது என்ற கவிதைச் சிற்றிதழ் ஒன்றினை நடத்தியவர். தவிரவும் தென்கிழக்கின் நாவல் தேக்கத்தை உடைத்து அதை உலக அரங்குக்கு கொண்டு சென்ற ஒரு புகழ்பெற்ற  நாவலாசிரியர் மட்டுமன்றி ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளருமாவார்.  அவர் மரபு-புதுக் கவிதைகளிலும் பரிச்சயமுடையவர்.

     
தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர். தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.. 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.  இவரது ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..        அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.. அபாயா- என் கறுப்பு வானம் என்ற இக்கவிதை நூல் இவரது ஐந்தாவது நூல் ஆகும்.

தீரன்; என்னோடு சிலகாலம் ஒன்றாக ஒரே திணைக்களத்தில் கடமை செய்தவர். அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்.. இடது கையால் எழுதும் பழக்கம் கொண்டவர். மனமுவந்து பழகுவதில் சிறந்தவர். நகைச்சுவை அவருக்கு ஒரு இயல்பான விடயம். இலகுதமிழ் அவருக்கு கைவந்த கலை.

தான் படைத்த நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகச் சிலவற்றையே இந்நூல்வாயிலாகத் தந்துள்ளார்.  அதிலும் குறும்பா- வெண்பா- ஹைக்கூ-விருத்தம-புதுக்கவிதைகள்;- காவியம் என்று பல்சுவைக் கதம்பமாக இதை ஆக்கியுள்ளார்.

அவரது மரபுசார் கவிதைகளில் பல இலக்கண வழுக்கள் இருந்த போதிலும் அது வாசிப்புக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.. அவர் மரபு புது வடிவங்களில் இந்நூலில் சில இடங்களில் புயலாக வீசியிருக்கிறார். சில இடங்களில் ஒரு தென்றலாக வருடியிருக்கிறார்.  ஒவ்வொன்றாக நான் எடுத்துச் சொல்வதை விட வாசகர் நீங்களே  இதை நேரிடையாக அனுபவிக்க முடியும்.... இத்தொகுதியை வாசித்த பின் என் இந்தக் கருத்தோடு உடன்படுவீர்கள் என்பது திண்ணம்.

நூலாசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 

கலாpoஷணம். அருட்கவிஞர் அக்கரைமாணிக்கம்.
பாண்டிருப்பு.